Friday, February 1, 2013

என்ன,தமிழ் நாடு பேர் மாத்தணுமா ?

இன்று நடந்த வழக்கு பற்றி சொல்லலேன்னா எனக்கு தலையே வெடிச்சுடும்.என் கோர்ட்டிற்கு வரும்  வழக்கு எல்லாமே இப்படி ஏடாகூடமாவே வருது.

இது தான் வழக்கு :

பெயர்                   :  திருமதி.அங்கயர்க்கண்ணி எம்.ஏ ., பி.எட்.,பி.எச்.டி.
வயது                   :  70
தொழில்              : ஓய்வு பெற்ற தமிழாசிரியர்
விருதுகள்          :  நல்லாசிரியர் விருது
வழக்கு                :  தமிழ்நாட்டின் பெயரை தாலிபான் நாடு என்று மாற்றுக

முதிர்ந்த உருவம். அறிவின் வெளிப்பாடாக அகன்ற நெற்றி. நடுவில் தமிழ் பெண்களின் அடையாளமான பெரிய குங்குமம். ஆசிரியர் ஆகையால் கையில் ஏதோ ஒரு புத்தகம் வைத்திருந்தார்.

எனக்கு என் தமிழ் அம்மா திருமதி.உலகம்மாள் அவர்களை மறுபடியும் பார்த்தது போல் இருந்தது.

"உட்கார்ந்துக்கறீங்களா அம்மா ?", நான் கேட்டேன். அவர்கள் ஒன்றும் குற்றவாளி இல்லையே. அதுவும் ஆசிரியர் வேறு. மறுத்துவிட்டார்.

"இது என்னங்க வழக்கு ? அம்மா,, தமிழ் நாடுனு  எப்படி பேர் வந்தது தெரியுமா , யார் வாங்கி கொடுத்தாங்க தெரியுமா ? ", மரியாதையுடன்  கேட்டேன்.

வர வர வழக்குகள் ஒரு மாதிரியாகவே இருக்கின்றன.

"ஐயா, யார் பேர் வெச்சா என்ன, என்ன பேர் வெச்சா என்ன, நடக்கறது எல்லாம் தலிபான் மாதிரி தானே இருக்கு", என்றார்.

"என்ன இருந்தாலும் அண்ணாதுரை வெச்ச பேர் இல்லீங்களா ?", நான்.

"அதுனாலே என்ன? நாடு இப்போ இருக்கற அழகை பார்த்தால் தலிபான் நாடு மாதிரிதான் தெரியுது ..", ஆணித்தரமாகச் சொன்னார்.

"இப்போ என்ன ஆகி விட்டது அம்மா ?", கொஞ்சம் வியப்புடன் கேட்டேன்.

"இன்னும் என்ன சார் ஆகணும்? இப்போ பாருங்க ...

ஆப்கானிஸ்தான் லே பேச முடியாது,படிக்க முடியாது, எழுத முடியாது. பெண்கள் தனியே வெளிலே நடமாட முடியாது. அதே தானே இங்கேயும்.

ஆப்கான் லே ரோடு கிடையாது.கரண்ட் கிடையாது.தண்ணி கிடையாது.தடி எடுத்தவன் தண்டால் காரன்.

நம்ம ஊர்லேயும் அப்பிடித்தானே !

புறம்போக்கு ஆளு மந்திரியோட உதவியாளர்.   நேற்று வரை கட்டை பஞ்சாயத்து பண்ணினவன் இன்னிக்கு பதிவிலே இருக்கான்.  அவன கைது பண்ண வேண்டிய போலீஸ் இப்போ அவனுக்கு சலாம் போடுது. கார் கதவை திறந்து விடுது.

கரண்ட் குடுங்கப்பான்னு கேட்டு போராட்டம் பண்ணினா கைது பண்றாங்க. அமைச்சர் மகன் போலீஸ் கிட்டருந்து தப்பிச்சு போக்கு காட்டிகிட்டு இருக்கான்.  அப்பா அமைச்சர்.  மகன போலீஸ் தேடுது.  மகன் இருக்கற இடம் அப்பாவுக்கு தெரியாது. இதை நாம நம்பணும்.

உள்ளூர் விஷயமா வேலை செய்யுங்கப்பானு  சொல்லி அமைச்சர் ஆக்கினா நம்ம அமைச்சர் டெல்லி பக்கமே போகாம உள்ளூர்லேயே தங்கிக்கறாரு.

தமிழ் நாட்டுக்கு தண்ணி குடுங்கப்பான்னு டெல்லிலே போய் பேச வக்கில்லை. தமிழை வளர்க்கப் போறோங்கறாங்க.

சரி, தமிழையாவது வளர்த்தாங்களான்னா அதுவும் இல்லை.ஏழாம் வகுப்பு மாணவன் ஒரு பத்து வரி எழுத முடியலே. அதுலே பத்து தவறு இருக்கு.

ஆசிரியர்கள் என்ன பண்றாங்கன்னு பார்த்தா .. சொல்லவே நா கூசுகிறது. நவீன ராவணர்கள் மாதிரி செயல் படறாங்க. அவங்களை கேட்டா ஆசிரியர் போராட்டம்.

பள்ளிக்கு வந்து பாடம் நடத்துங்கப்பான்னா ஏதோ அவதூறு சொன்னமாதிரி பேசறாங்க.மந்திரிங்க அவங்களுக்கு உதவராங்க.

வேடிக்கை என்னன்னா, மந்திரிங்க வெறும் எட்டாம் வகுப்பு. அவங்க ஆசிரியர்களுக்கு உதவறாங்க.

பெண் பிள்ளைங்களை பள்ளிக்கு அனுப்ப முடியுதா ? தெருவுலே இறங்கி நடந்தா விடலைப்பசங்க கேலி பண்றாங்க. கேக்க முடியாத வார்த்தைகள் பேசறாங்க. போலீஸ் லே போனா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ங்கம்மாங்கறாங்க. ரொம்ப கேட்டா இது ஸ்டூடெண்ட்ஸ் பிரச்சினையாயிடும்.அதுனாலே விட்டுடுங்கங்கறாங்க.

"பாதகம் செய்பவரைக் கண்டால் 
 பயம்கொள்ள லாகாது பாப்பா"     னு பள்ளிலே சொல்லிட்டு வெளிலே பயந்து
 பயந்து வாழ முடியலே ஜட்ஜ் சார்.

 "மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல 
  மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா " னு பெருமையா பள்ளிலே
 சொல்றோம். ஆனா வெளியே வந்த உடனே தலை குனிஞ்சு போறோம்.

 இந்த மாதிரி ரெட்டை வாழ்கை வாழ முடியலே ஜட்ஜ் தம்பி.

 சினிமா னு எடுக்கறாங்க. காண சகிக்கலே தம்பி. வீட்டுலே பிள்ளைகள் கூட
 உக்காந்து பார்க்க முடியலே. உடம்பெல்லாம் கூசுது. மன்னிக்கணும் தம்பி,
 நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலே இருக்கு.

 ஒரு வகையிலே இந்த விஸ்வரூபம் படத்தை தடை பண்ணினது நல்லது தான். என்னைக்கேட்டால் எல்லா தமிழ் படங்களையும் தடை பண்ணிடலாம்.

முன்னே ஒரு காலத்துலே வெள்ளைக்காரங்க ஒரு தமிழ் படத்தை தடை பண்ணினாங்க.

ஆனா  நாங்க எல்லாம் அந்த சினிமா பார்த்தோம்.தியாக பூமி னு பேரு. அதை நாங்க எல்லாரும் சின்ன பொண்ணுங்க சேர்ந்து பார்த்தோம்.அத பார்த்து சுதந்திரப் போர்லே பங்கு எடுத்துக்கிட்டோம். அங்கே தான் என் வீட்டுக்காரரை சந்திச்சேன்.இப்போ அவரு தியாகி பென்ஷன் விஷயமா அலைஞ்சுகிட்டு இருக்காரு.அது வேற கதை.

இப்போ எடுக்கற படங்களப் பார்த்தா நாடே தேவதாசித்தனம் பண்ண வேண்டியது தான். அவ்வளோ தரம் தாழ்ந்து போய்ட்டோம். என்னப்பா இதுன்னு கேட்டா கருத்து சுதந்திரம் அப்படிங்கறாங்க .."

பாரத மாதாவே மனிதஉருவில் வந்து பேசுவது போல் இருந்தது.

மேலும் தொடர்ந்தார்.

"பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்.

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
  மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் " ,

என்று  சிலப்பதிகாரதுலே இயற்கை வணக்கப்பாடல் எல்லாம் இருக்கு.

அந்த புனிதநாள் அன்று தமிழ் நாட்டுலே தொலைகாட்சியில்  நடக்கும் தமிழ்க்கொலை தாங்க முடியலே ஜட்ஜ் ஐயா.

தமிழ் கலாச்சாரம் பற்றி கொஞ்சமும் தெரியாத பதினாறு வயது ஹிந்தி பொண்ணு - அந்த பொண்ணை பேட்டி காண்கிறார்கள். அந்த பொண்ணு ஒரு சினிமா நாயகியாம்.அரை குறை ஆடை அணிந்து அது திணறித் திணறி தமிழ் பேசி, நல்ல நாளும் அதுவுமா ஒரே அலங்கோலம்.

பிறகு பட்டி மன்றம்ங்கற பேர்லே ஒரே கோமாளிக்கூத்து. பட்டிமன்றங்கள்லே ஒரு கம்பராமாயணம் உண்டா, சிலப்பதிகாரம் உண்டா .. ஒரு இலக்கியம் கிடையாது. ஒரே துணுக்குத் தோரணங்கள்.

பிறகு தமிழ் பேர் கொண்ட ஒரு தமிழ் சினிமா. பேருக்கும் கதைக்கும் துளியும் தொடர்பு கிடையாது. வன்முறை, காமம்.. அவ்வளவு தான்.


"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
  வகுத்தலும் வல்லது அரசு "            
  என்று வள்ளுவர் சொன்னார்.

இங்கே அரசாங்கங்கள் இது எதையும் செய்யாமல், மக்களுக்கு மது பானம் வழங்கறாங்க. வள்ளுவர் கள்ளுண்ணாமை பற்றி சொல்லி இருக்கார். வள்ளுவர் வழியில் போறோம்னு சொல்லிட்டு இவுங்க கள் வியாபரம் பண்றாங்க.

" இது பொறுப்பதில்லை-தம்பி! எரி தழல் கொண்டு வா! " னு பாரதியார் பாஞ்சாலி சபதத்துலே சொன்ன மாதிரி ஒரே கோபம் கோபமா வருதுங்க ஜட்ஜ் தம்பி.


இந்த கண்றாவி நாட்டை தமிழ் நாடு  என்று சொல்லி தமிழ்த்தாயை அவமானம் செய்யலாமா ?

அதனாலேதான் தயவு செஞ்சு கேட்டுக்கறேன், நம்ம மாநிலத்தோட  பெயரை   "தாலிபான் நாடு" என்று மாற்றி உத்தரவு போடணும்னு கேட்டுக்கறேன்".

ஒரு மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது.




No comments:

Post a Comment